மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான விசாரணை இன்னும் 6 மாதத்தில் முடிந்துவிடும் என்று விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதுபற்றி விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் மதுரையில் 12வது கட்ட விசாரணையை துவக்கினார். இந்த விசாரணைக்காக 60 பேருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து போலீசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் ராஜேஸ்வரன் கூறினார். மதுரையில் அதிகபட்சமாக 670 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து 2017ம் ஆண்டு ஜனவரியில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அப்போது சில இடங்களில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி