கொழும்பு: மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அவர்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இலங்கை சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் நடவடிக்கை மீது அதிருப்தியடைந்த அதிபர் சிறிசேனா, அவரை நீக்கிவிட்டு புதிய பிரதமராக ராஜபக்சேயை நியமித்தார். அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், நாடாளுமன்றத்தை அதிபர் கடந்த 9-ம் தேதி கலைத்தார். பொதுத் தேர்தல் ஜனவரி 5-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜபக்சேயும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி, தனது தொண்டர்கள் தொடங்கிய இலங்கை மக்கள் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி