புதுடெல்லி: இந்தியாவில் பயன்படுத்தப்படும் பாலில் 90 சதவீத பால் பாதுகாப்பானது என்றும் 10 சதவீத அளவே குடிப்பதற்கு ஏற்றவை அல்ல என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தேசிய பால் தரம் குறித்த சர்வே கடந்த மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட்டது. 29 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 50,000க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 1100 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர கட்டுப்பாடு அமைப்பு (எப்எஸ்எஸ்ஏஐ) நேற்று அறிக்கை வெளியிட்டது. ஆய்வறிக்கையை வெளியிட்டு அதன் முதன்மை செயல் அதிகாரி பவன் அகர்வால் கூறியதாவது: பாலின் தரம் குறித்த ஆய்வில் 10 சதவீதக்கும் குறைவான பால் மாதிரிகளே பயன்படுத்த ஏற்றதாக இல்லை. 90 சதவீத பால் குடிப்பதற்கு ஏற்றதாக இருந்தது.