திருவனந்தபுரம்: கேரளாவில் வாலிபரை கார் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த டிஎஸ்பி ஹரிகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை டிஎஸ்பியாக இருந்தவர் ஹரிகுமார். இவர் கடந்த 5ம் தேதி இரவு நெய்யாற்றின்கரை கொடங்காவிளையில் உள்ள தனது நண்பர் பினுவின் வீட்டுக்கு சென்றபோது, ரோட்டில் காரை நிறுத்தி இருந்தார். இதனால் அருகில் கார் நிறுத்தி இருந்த ஷனல்குமாருக்கும் ஹரிகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஷனல்குமாரை பிடித்து ஓடும் கார்் முன்பு வீசினார். இதில் படுகாயம் அடைந்த ஷனல்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதையடுத்து டிஎஸ்பி ஹரிகுமாரும், பினுவும் தலைமறைவானார்கள். டிஎஸ்பி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குமரி மாவட்டம் திற்பரப்பில் அவர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவல்படி போலீசார் அங்கு சென்றனர். அப்போது அவருக்கு அறை ஒதுக்கிய லாட்ஜ் உரிமையாளர் சதீஷ்குமார் மற்றும் டிஎஸ்பிக்கு புதிய சிம்கார்டு வாங்கி கொடுத்த பினுவின் மகன் அனுப்கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். டிஎஸ்பி ஹரிகுமாரை போலீசார் 5 படைகளாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். ஒரு குழு கேரளாவிலும், 2 குழுக்கள் தமிழ்நாட்டிலும், 2 குழுக்கள் கர்நாடகாவிலும் தேடி வந்தனர். சிம்கார்டுகளை மாற்றியும், வாகனங்களை மாற்றியும் ஹரிகுமார் தண்ணி காட்டி வந்தார். அவரை சரணடைய வைக்க போலீசார் அவரது உறவினர்கள் மூலம் நெருக்கடி ெகாடுத்து வந்தனர். இன்று இவரது முன்ஜாமீன் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை டிஎஸ்பி ஹரிகுமார் திருவனந்தபுரம் கல்லம்பலத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இந்த வீட்டில்தான் ஹரிகுமார் குடும்பத்துடன் தங்கி இருந்தார். நெய்யாற்றின்கரையில் டிஎஸ்பியாக பொறுப்பேற்ற பின்னர் இந்த வீட்டை பூட்டி விட்டு நெய்யாற்றின்கரையில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். மனைவி வீடு கல்லம்பலத்தில் தான் உள்ளது. நேற்று காலை நாய்க்கு உணவு கொடுப்பதற்காக மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். கதவை திறந்த பார்த்தபோது அவர் தூக்கில் இறந்து கிடந்தது தெரியவந்தது. வர்க்கலா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி ைவத்தனர்.சாவில் மர்மம்போலீசார் சல்லடை போட்டு தேடி வந்த நிலையில் அவர் எப்படி யாருக்கும் தெரியாமல் கல்லம்பலத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார் என்பது மர்மமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவே வீட்டுக்கு வந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. வீட்டின் பின்புறம் உள்ள அறையில் தான் அவர் தூக்குபோட்டு இருந்தார். டிஎஸ்பியின் சாவில் மர்மம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவரை பாதுகாத்தவர்கள் தான் மரணத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி