ஈரோடு: சபரிமலை சீசன் தொடங்க உள்ளதையடுத்து ஈரோடு ஜவுளி சந்தையில் ஐயப்ப பக்தர்கள் வேட்டி, துண்டுகள் விற்பனை தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 4 வாரங்களாக ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கடைசி ஒரு வாரகாலத்தில் விற்பனை இருமடங்காக நடைபெற்றதோடு தீபாவளிக்காக கொள்முதல் செய்யப்பட்டிருந்த ஜவுளிகளில் 80 சதவீதம் வரை விற்று தீர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்த போதிலும் சபரிமலை சீசன் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கார்த்திகை முதல் தேதி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பது வழக்கமாகும். இன்னும் 3 நாளே உள்ள நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் ஐயப்ப பக்தர்கள் அணியும் வேட்டிகள், துண்டுகள், இருமுடி பைகள் ஆகியவை விற்பனை அதிக அளவில் நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.