சேலம்: பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க சிறுமிகள், பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.சேலத்தில் நேற்று நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சிறுமிகள் மட்டுமின்றி பணி செய்யும் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இத்தகைய சம்பவங்களை தடுக்க பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும். துப்பாக்கி சுடும் பயிற்சி உள்பட அனைத்துவித தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்திடும் எண்ணம் அரசிடம் இல்லை. காரணம், ஆளும் அதிமுகவுக்கு, அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவுவோம் என்ற பயம் இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் பயத்தில் தான் இருக்கிறார்கள். அதனால், இடைத்தேர்தல் நடக்க சாத்தியமில்லை. அதையும் மீறி தேர்தல் நடத்தப்பட்டால், அதிமுகவை வீழ்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.