பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க சிறுமிகள், பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி: முத்தரசன் வலியுறுத்தல்

சேலம்: பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க சிறுமிகள், பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.சேலத்தில் நேற்று நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சிறுமிகள் மட்டுமின்றி பணி செய்யும் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இத்தகைய சம்பவங்களை தடுக்க பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும். துப்பாக்கி சுடும் பயிற்சி  உள்பட அனைத்துவித தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்திடும் எண்ணம் அரசிடம் இல்லை. காரணம், ஆளும் அதிமுகவுக்கு, அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவுவோம் என்ற பயம் இருக்கிறது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் பயத்தில் தான் இருக்கிறார்கள். அதனால், இடைத்தேர்தல் நடக்க சாத்தியமில்லை. அதையும் மீறி தேர்தல் நடத்தப்பட்டால், அதிமுகவை வீழ்த்த  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தமிழகத்தில் அதிமுக அரசு இருக்கவே பாஜவும் விரும்புகிறது. 20 தொகுதி தேர்தல் முடிவால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், நமக்கு சிக்கல் என பாஜ கருதுகிறது. எனவே இடைத்தேர்தல்  நடத்த சாத்தியம் இல்லை.ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க அதிமுக அரசு, நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக உள்ளது. மாறாக தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 அதிமுகவினரை விடுவிக்க மாறி, மாறி  கவர்னருக்கு அறிக்கை அனுப்புகிறார்கள்.   

 7 பேர் விடுதலை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், முறையாக பதிலளிக்காமல், தற்போது சரியாக கேள்வி கேட்கவில்லை என பத்திரிகையாளர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க பார்க்கிறார். அவர் நல்ல நடிகர். பொதுவாக இரண்டாம்  கட்ட தலைவர்கள் இப்படித்தான், நழுவுவார்கள். ஆனால், ரஜினி இரண்டாம் கட்ட தலைவர் என நான் கூறவில்லை. இவ்வாறு முத்தரசன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: