திருச்சியில் ராணுவ ஆள் தேர்வு முகாம்: பச்சை குத்தியிருந்ததால் 800 பேர் நிராகரிப்பு

திருச்சி: திருச்சி 117வது பிரதேச ராணுவ படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் மன்னார்புரம் ராணுவ பயிற்சி மையத்தில் நேற்று தொடங்கியது. 57 பொதுப்பணித்துறை சிப்பாய்கள், 1 சிப்பாய் எழுத்தர், 1 சலவை தொழிலாளி ஆகிய பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்க தமிழகம் மற்றும் வௌிமாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு கடந்த மாதம் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. முதல் நாளான நேற்று தமிழகத்தில் உள்ள 15க்கும் அதிகமான மாவட்டங்களை சேர்ந்த 7 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். முதலில் உயரமும், பின்னர் உடலில் பச்சை குத்தி உள்ளார்களா என்றும் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. இதை தொடர்ந்து ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

 முதற்கட்டமாக நடந்த உயரம் சாிபார்க்கும் தேர்வில் 7 ஆயிரம் பேரில் 3 ஆயிரத்து 264 பேர் தேர்வு பெற்று மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அடுத்தடுத்த தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்த தேர்வுகள் 117வது பிரதேச ராணுவ படை மையத்தின் அதிகாரி நவ்கன் மேற்பார்வையில் நடந்தன. தேர்வுகளில் நேற்று மட்டும் கை மற்றும் மார்பு பகுதியில் பச்சை குத்தியிருந்த 800 இளைஞர்கள் நிரகரிக்கப்பட்டனர். முகாமில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும் மருத்துவ குழுவினரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ் வேன்களும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் மைதானத்தின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆள்மாறாட்டம், மோசடிகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் உடற்தகுதி தேர்வை ராணுவ அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர். அனைத்து தேர்வுகளிலும் தேர்வானவர்களுக்கு இன்று மருத்துவ பரிசோதனையும் நடந்தது. மேலும் இன்று கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 14 மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: