இலங்கை அரசியலில் பரபரப்பு: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் நடவடிக்கை மீது அதிருப்தியடைந்த அதிபர் சிறிசேனா, அவரை நீக்கிவிட்டு புதிய பிரதமராக ராஜபக்சேயை நியமித்தார். அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், நாடாளுமன்றத்தை அதிபர் கடந்த 9ம் தேதி கலைத்தார். பொதுத் தேர்தல் ஜனவரி 5ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜபக்சேயும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி, தனது தொண்டர்கள் தொடங்கிய இலங்கை மக்கள் கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட 10 கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  அதில், ‘‘இலங்கை அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட 19வது திருத்தத்தின்படி, நான்கரை ஆண்டுகளுக்கு முன்பாக நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை. இதனால், ‘‘இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்தது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்ற பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக தேர்தல் நடைபெறுவதை தடுக்க முடியும்’’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று இலங்கை உச்சநீதிமன்றத்தில் விசாரணகை்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 19-ம் தேதி வரை நாடாளுமன்றத்தை கலைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பிற்கும் தடை விதித்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூட்டப்படும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: