சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்.களில் தங்கள் பணம் திருடப்படுவதாக வாடிக்கையாளர்கள் சார்பில் சென்ட்ரல் ஆர்.பி.எஃப்.பிலும் பெரியமேடு காவல் நிலையத்திலும் புகார்கள் குவிந்தன. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது ஏடிஎம் மையங்களில் மக்கள் கவனத்தை திசை திருப்பி பணம் திருடும் நபரின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் இன்று அந்த நபர் சிக்கினார். விசாரணையில் அவன் தெலுங்கானாவைச் சேர்ந்த கோபி கிருஷ்ணா என்பது தெரியவந்தது. ஏடிஎம்மில் ஒருவர் அட்டையை செருகியதும் இந்த எந்திரம் வேலை செய்யாது என்று முதலில் இவர் கூறுவான்.
பின்னர் பணம் எடுக்க வந்த நபர் அதே மையத்தில் உள்ள மற்றொரு எந்திரத்தில் பணம் எடுக்கும் போது ரகசிய குறியீட்டெண்ணை பார்த்து, முதலில் அட்டையை செருகிய எந்திரத்தில் ரகசிய குறியீட்டெண்ணை பதிவிட்டு பணத்தை திருடியதை அவன் வாடிக்கையாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட நபர், பெரியமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டான். ரயிலில் வந்து கொள்ளை அடித்து விட்டு விமானத்தில் பயணிப்பதை அவன் வாடிக்கையாக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவன் எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளான் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி