மனிதனால் ஆக்கிரமிக்க முடியாத நிலப்பகுதி

பூமியிலே மிகவும் குளிர்ந்த பகுதி அண்டார்ட்டிக்கா. புவியின் 7வது கண்டம் என்று அழைக்கப்படும் இப்பகுதி பல்வேறு ஆச்சரியங்களையும், மர்மங்களையும் கொண்டுள்ளது. இந்த கண்டம் முழுவதும் பனிக்கட்டியாலே மூடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 15ஆயிரம் அடிக்குக் கீழே துளையிட்டு சென்றால் மட்டுமே மண்ணை பார்க்க முடியும் (உலகிலேயே மண்திருட்டு நடக்காத பகுதி இதுவாகத்தான் இருக்கும்). புவியின் தென்முனையில் அமைந்திருப்பதால் சூரியவெளிச்சம் ஆறுமாதங்கள் மட்டுமே இருக்கும். இதனால் இதை ஒரு பனிக்கட்டி பாலைநிலம் என்கிறார்கள். இங்கே நிரந்தரமாக மனிதன் வாழ முடியாத அளவிற்கு கிடுகிடுவைக்கும் பனிச்சூழல் நிறைந்து கிடக்கிறது.

பல நூறு ஆண்டுகளாக உருகாத பனிப்பாறைகள் உயிர்வாழ தகுதியற்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. உலகிலேயே கொடுமையான குளிரும், பனிக்காற்றும் நிறைந்த இந்த கண்டத்தில் எந்த ஒரு உயிரினமும் நிலையாக வாழ்ந்ததே இல்லை. வெப்பமண்டல பிரதேசத்தில் இருந்து கொண்டு அட...கண்ணுக்கு எட்டியதூரம் வரை பனியாக இருக்குமா எவ்வளவு ஜாலியாக இருக்கும்என்றெல்லாம் கண் மூடி மனம் லயிக்காதீர்கள். கடல் போன்று பனியும் பெரும் அயர்ச்சியை தரும் பரப்பாகும். முதலில் பார்ப்பதற்கு சந்தோஷத்தைத் தந்தாலும் தொடர்ந்து அங்கிருந்தால் உங்களுக்குள் பெரும் விரக்தியும், வெறுப்பும் ஏற்பட்டு விடும். பனிப்புயல் 300கிமீ.வேகத்தில் வீசும்.

எப்போது இப்புயல் வீசும், இயல்புநிலை திரும்பும் என்றெல்லாம் கணிக்க முடியாது. பனி என்றதும் சமதளமாக வழுவழுப்பாக இருக்கும் சறுக்கி விளையாடலாம். உருளலாம் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். கூர்மையாக நீட்டியபடி பல இடங்களில் இருக்கும். கால் வைத்தால் குத்தி கிழித்து விடும். பனிப்பிளவு பகுதியில் காலை வைத்தால் அதலபாதாளத்தில் விழுந்து அடுத்த சிலநிமிடங்களிலேயே உடல் உறைந்து விடும். இது போன்ற கொடூர சீதோஷ்ணநிலையினால் பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் யாரும் இப்பகுதியில் பயணிக்கவில்லை. இருப்பினும் ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் இப்பகுதியை ஆராய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

நார்வே நாட்டைச் சேர்ந்த ரோல்ட் அருன்ட்சன் என்பவர் 1911 டிசம்பர் 14ல் தென்துருவத்தில் மனிதனின் தடத்தை பதித்தார். மனிதர்கள் வாழவே இப்பகுதி சாத்தியமில்லை என்றாலும் மனித ஆசை என்னவோ இப்பகுதியை வலம் வந்து கொண்டே இருந்தது. விளைவு...ஒவ்வொரு நாடும் பல்வேறு ஆய்வகங்களை ஆராய்ச்சிக்காக அமைந்துள்ளது. இந்தியா சார்பில் தட்சின்கங்கோத்ரி எனும் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் தக்க குளிர்சாதன பாதுகாப்புடன் குறிப்பிட்ட நாட்கள் தங்குவதும், மீண்டும் வேறு குழு அங்கு செல்வதுமாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வழக்கம்போல இப்பகுதிக்காக பல்வேறு நாடுகள் சண்டையிட்டு பின்பு சமரசமாகின.

தற்போது இப்பகுதியை ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கையாண்டு வருகின்றன. புவியில் எல்லா இடத்தையும் ஆக்கிரமிக்க முடிந்த மனிதனுக்கு இப்பகுதி பெரும் சவாலாகவே உள்ளது. மனிதகுலம் தன்னை நெருங்கிவிடாமல் எட்டவே வைத்திருக்கும் இந்த இயற்கையின் ஆற்றல் அளப்பரியது. ஒருவேளை வருங்காலத்தில் மனிதன் இங்கு வாழ்ந்தாலும் நான் இந்த மண்ணின் மைந்தன், நான் வாழ்ந்த மண் என்று ‘மண் பற்றி’ பேசவே முடியாது. கொட்டும் பனியால் நிலப்பரப்பே மூழ்கிக்கிடக்கும் இந்த கண்டம் உலக அளவில் தலைமுறை கடந்த ஆச்சரியங்களை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: