திருவாரூர் அருகே வயதான தம்பதியினருக்கு விஷம் கொடுத்து நகை கொள்ளை: மர்மநபர் துணிகரம்

திருவாரூர்: திருவாரூர் அருகே வயதான தம்பதியினருக்கு விஷம் கொடுத்து நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே விஷ்ணுதோப்பு என்ற பகுதியில் செல்லம்பிள்ளை(75) மற்றும் அவரது மனைவி சகுந்தலா(65) வசித்து வந்துள்ளனர். நேற்று வீடு பார்ப்பதற்கு வந்ததாக கூறி மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். தான் நாட்டு வைத்தியம் பார்ப்பவர் என்றும் கூறி வயதான தம்பதியினருக்கு கை, கால், மூட்டுவலிக்கான மருந்தையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து மருந்தை வாங்கிக்கொண்ட தம்பதியினர், இரவு மருந்தை உண்டு உறங்கியுள்ளனர். இந்த நிலையில் காலை வெகுநேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வயதான தம்பதியினர் மயக்க நிலையில் இருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, சகுந்தலா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செல்லம்பிள்ளை ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து வழக்கப்பதிவு செய்துள்ள போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போது 6 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக வயதான தம்பதியினருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: