திருமலை: வருமானத்திற்கு அதிகமாக 50 கோடி சொத்து சேர்த்ததாக மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் மோட்டார் வாகன உதவி ஆய்வாளராக இருந்தவர் வெங்கட்ராவ். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின்பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீடு, அலுவலகம், டிரைவர், உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், 3 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து டிரைவர் மோகன்ராவிடம் விசாரித்தபோது, வெங்கட்ராவ், தனது உறவினர் பெண் மூலம் கோபாலபட்டணத்தில் உள்ள மெக்கானிக் சீனிவாசராவின் வீட்டில் 2 சூட்கேஸ்களை பதுக்கியது தெரியவந்தது.