சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகளை உருவாக்குவது குறித்து அரசு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ்வழி பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்ய கோரியும், மழலையர் வகுப்புகளை துவங்க கோரியும் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் 80 லட்சம் மாணவர்கள் தமிழ்வழிக் கல்வியில் பயில்கிறார்கள். அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பை முடித்த பிறகு, ஆங்கில பேச்சுத்திறன் இல்லாத காரணத்தால், தொழிற்கல்விகளில் சேர முடியாத நிலையும், நல்ல வேலைவாய்ப்புகளை பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ்வழி பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்துமாறும், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மழலையர் வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடங்குமாறும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆங்கிலவழி வகுப்புகளை தொடங்க அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.