அயோத்தி: அயோத்தி கர்சேவக்புரம் தொழிற்கூடத்தில், ராமர் கோயிலுக்கான கற்சிலை தயாரிக்கும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், முதல் தளப் பணிகள் முழுமை அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், ராமர் பிறந்த இடத்தில் மீண்டும் கோயிலை கட்டுவதற்கான பணிகளின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மீண்டும் ராமர் கோயிலை கட்ட விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம் ஜென்மபூமி அறக்கட்டளை கடந்த 1993ல் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை கர்சேவக்புரத்தில் தொழிற்கூடத்தை நடத்தி வருகிறது. ராமர் பிறந்த இடத்தை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள், அருகில் உள்ள இந்த தொழிற்கூடத்தையும் பார்வையிடுவது வழக்கம்.