தண்டையார்பேட்டை: காசிமேட்டில் மீன்பிடி துறைமுகம் அருகே படகு பழுது பார்க்கும் தளத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டு படகுகள் எரிந்து நாசமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே விசை படகுகள் பழுது பார்க்கும் தளம் உள்ளது. இங்கு, மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்க்கவும், புதிய படகு கட்டும் பணியிலும் ஈடுபடுவார்கள். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இப்பகுதியில் தேங்கி கிடந்த குப்பையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்திலேயே இந்த தீ மளமளவென பழுது பார்க்க நிறுத்தி வைத்திருந்த படகு மீது பரவி எரிய தொடங்கியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து தீணை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்கு தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழு வந்து, சுமார் 2 மணி நேரம் போராடி உடனடியாக தீயை அணைத்தனர்.