அம்பத்தூர்: அம்பத்தூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரப்பரப்பு ஏற்பட்டது. அம்பத்தூர் அடுத்த ஒரகடம் காந்தி நகர் நெடுஞ்சாலையில் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கோயில் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இச்சாலையில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே, இந்த கடையை மூட வேண்டும், என மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். அதன்பேரில் கடந்த ஓராண்டுக்கு முன் இந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மூடினர். இந்நிலையில், மூடிய கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் முயன்றனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடும் எதிர்ப்பையும் மீறி நேற்று மதியம் இந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், மேற்கண்ட டாஸ்மாக் கடை முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.