15 வயது சிறுமிக்கு திருமணம்: வாலிபர் கைது

சென்னை: ஆவடி அடுத்த அயப்பாக்கம், அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சிவகுமார் (24). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இருவருக்கும் விழுப்புரம் அருகே மயிலம் முருகன் கோயிலில் வைத்து திருமணத்தை பெற்றோர்கள் நடத்தி வைத்தனர். பின்னர், புதுமணத்தம்பதி அயப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு மாலை வந்தனர். இந்நிலையில், ரகசிய தகவலின்பேரில் சென்னை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அக்சில்யா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது, 15வயது சிறுமிக்கு திருமணம் நடந்து இருப்பது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அவர் இருவரையும் மீட்டு திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரின் பெற்றோர் சந்திரன்- ராணி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், சிவகுமாரை போலீசார் கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை கெல்லீசில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: