இலங்கை அரசு, அரசியலமைப்பு சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் கருத்து

பிரான்ஸ்: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது கவலையளிப்பதாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.  இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் பொருளாதார கொள்கைகளில், அதிபர் சிறிசேனாவுக்கு உடன்பாடு இல்லை. மேலும், சிறிசேனா  மீதான கொலை சதி விவகாரத்தை, ரணில் கண்டுகொள்ளாமல் இருந்ததும் அதிபர் சிறிசேனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பிரதமர்  பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக சிறிசேனா கடந்த மாதம் 26ம் தேதி  நியமித்தார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத ராஜபக்சேயை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் எனக் கூறிய ரணில், அவையில்  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை ராஜபக்சே திரட்டும் வகையில் நாடாளுமன்றத்தை வரும் 14ம் தேதிக்கு சிறிசேனா ஒத்திவைத்திருந்தார்.  ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களை சமரசம் செய்யும் அதிபர் சிறிசேனாவின் முயற்சிகள்  தோல்வியடைந்தன. ராஜபக்சேயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வேறு வழியின்றி இலங்கை நாடாளுமன்றத்தை  அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கலைத்தார். உடனே பொதுத்தேர்தல் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம்  அறிவித்தது.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற, முதல் உலகப்போர் நிறைவுற்றதன் 100-ம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.நா. பொதுச்  செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இலங்கை அரசு, அரசியலமைப்பு சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டின்  சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு பிரச்சனைகளை களைய வேண்டும் என்ற அவர், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது கவலையளிப்பதாகவும்  கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: