இலங்கை அரசியலில் பரபரப்பு: பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச

கொழும்பு: இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் ராஜபக்ச இணைந்துள்ளார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் பொருளாதார கொள்கைகளில், அதிபர் சிறிசேனாவுக்கு உடன்பாடு இல்லை. மேலும், சிறிசேனா மீதான கொலை சதி விவகாரத்தை, ரணில் கண்டுகொள்ளாமல் இருந்ததும் அதிபர் சிறிசேனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக சிறிசேனா கடந்த மாதம் 26ம் தேதி நியமித்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத ராஜபக்சேயை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் எனக் கூறிய ரணில், அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.

பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை ராஜபக்சே திரட்டும் வகையில் நாடாளுமன்றத்தை வரும் 14ம் தேதிக்கு சிறிசேனா ஒத்திவைத்திருந்தார். ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களை சமரசம் செய்யும் அதிபர் சிறிசேனாவின் முயற்சிகள் தோல்வியடைந்தன. ராஜபக்சேயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வேறு வழியின்றி இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கலைத்தார். உடனே பொதுத்தேர்தல் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதுகுறித்து ரணில் வி்க்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள செய்தியில், ‘‘நாடாளுமன்றத்தை இலங்கை அதிபர் சிறிசேனா கலைத்தது சட்டவிரோதம். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்வோம். அதிபரின் சர்வாதிகார நடவடிக்கையில் இருந்து பாதுகாக்கும்படியும், அரசியலமைப்பு சாசனத்தையும் சட்ட விதிமுறைகளையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுக்கும்’’ என கூறியுள்ளது. இந்நிலையில் மகிந்த ராஜபக்சவுடன் முன்னாள் எம்.பி. 50 பேரும் இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்துள்ளனர். மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: