சென்னை: பருவக் காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் ஆகியவற்றிற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் புற்று நோயின் கடைசி நிலையில் ஏற்படுகின்ற வலி மற்றும் வலி நிவாரணத்திற்கான சிகிச்சை முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், மார்பக புற்றுநோயை தடுக்க பெண்கள் சுய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றுக் கூறினார். ஆரம்ப காலத்திலேயே மருத்துவரை அணுகினால் அவற்றை குணப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். அதன் பிறகு பேசிய அவர், பெங்களூரு மற்றும் சித்தூரை தொடர்ந்து தமிழகத்திலும் பரவலாக பன்றி காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்தார். இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாக அவர் கூறினார். அதேபோல தேவையான அளவிற்கு மருந்துகளும், தடுப்பூசிகளும் இருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.