×

நாகர்கோவில், விழுப்புரத்தில் பரிதாபம் பன்றிக்காய்ச்சலுக்கு பேராசிரியை உள்பட 2 பேர் பலி

நாகர்கோவில்: பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஓய்வு பெற்ற பேராசிரியை உள்பட 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தாண்டு அக்.7ம் தேதி நிலவரப்படி 232 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குணவீதி நர்சலேன்தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை திரேசா ஜோசப்பின் ராணி(60), பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்காக சிறப்பு வார்ட்டில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று மாலை சிகிச்சை பலனின்றி திரேசா ஜோசப்பின் ராணி  இறந்தார். அதே வார்டில் அஸ்வதி என்ற ஒரு வயது குழந்தை, இளம்பெண் ஸ்டெபி(29) ஆகிய 2 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து  வருகின்றனர். இதுபோல் விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பஞ்சாபிகேசன்(32). இவரது மனைவி சுகன்யா(27), இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சுகன்யா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் அவர் வானூர் அருகே உள்ள ஆண்டியார்பாளையம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால்புதுச்சேரி ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது பன்றி காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சுகன்யா அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சுகன்யா உயிரிழந்தார். நேற்று மட்டும் பன்றி காய்ச்சல் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagercoil , 2 killed,swine flu,Nagercoil
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...