நீச்சல் குளத்தில் குளித்தபோது தந்தை கண்முன்னே மகன் பரிதாப சாவு

ஆலந்தூர்: சிட்லப்பாக்கம் சாந்தி காலனியை சேர்ந்த ஸ்ரீதரும் அவரது மகன் சாய்வர்ஷனும் (16) நேற்று காலை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்துக்கு சென்றனர். பின்னர், இருவரும் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டனர். திடீரென தண்ணீரில் மூழ்கி சாய்ஸ்ரீவர்ஷன் தத்தளித்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர், மகனை மீட்டு தனது காரில் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியிலேயே சாய்வர்ஷன் இறந்துவிட்டதாக கூறினர்.

பின்னர், மருத்துவமனை நிர்வாகத்தினர் கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் குமார், சாய்வர்ஷன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். விசாரணையில், சாய்ஸ்ரீவர்ஷன் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்ததும் மாவட்ட அளவில் நடந்த பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்றதும் ஒரு போட்டியில் மாவட்ட அளவில் 2ம் இடம் பிடித்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் குளத்தில் நீண்டநேரம் குளித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாய்ஸ்ரீவர்ஷனுக்கு திடீர் என மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், தனது மகன் தண்ணீரில் மூழ்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை மகனை வெளியில் கொண்டு வந்ததும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: