திமுக தலைவரின் தகுதி பற்றி பேச துளிக்கூட அருகதை இல்லை: முதல்வருக்கு டி.ஆர்.பாலு பதிலடி

சென்னை: திமுக தலைவரின் தகுதி பற்றிப் பேச துளி கூட அருகதை இல்லை என்று முதல்வருக்கு டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார். தி.மு.க. முதன்மைச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கை: சி.பி.ஐ. விசாரணை பீதியில் உருண்டு புரளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி என்ற பெயரில் பிதற்றிக் கொண்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். “இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும்” “மாநில நெடுஞ்சாலைத் துறைக்கும்” உள்ள அடிப்படை வித்தியாசம் கூட புரியாத முதல்வர் “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போல் உளறிக் கொட்டியிருக்கிறார். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பதில் திமுக மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்த போது நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புக்குரிய சாதனைகள் எதையும் புரிந்து கொள்ளாமலே கொச்சைப்படுத்த முனைந்திருக்கிறார்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது மட்டுமே மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பணி. சாலைப்பணிகளை செயல்படுத்துவது, டெண்டர் விடுவது, டெண்டர்களை முடிவு செய்யும் அதிகாரம் எல்லாம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம். ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் வித்தியாசம் தெரியாதவராய் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  குறைந்தபட்சம் அவர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர்களிடம் கேட்டிருந்தால் இந்த அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொள்ளும்படி பழனிசாமிக்கு போதித்திருப்பார்கள்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிய சில டெண்டர்களை மேற்கோள் காட்டியுள்ள முதல்வர், “ஒரு கிலோ மீட்டருக்கு 8.78 கோடி ரூபாய், 12 கோடி ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்கள்” என்று எழுதிக் கொடுத்ததைப் புரிந்து கொள்ளாமல் அப்படியே கக்கியிருக்கிறார். ஆனால், “செங்கம்பள்ளி - கோவை - கேரளா” எல்லை வரை உள்ள 82 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைப் பணி கிலோமீட்டருக்கு 4.14 கோடி ரூபாய் மதிப்பிலும், 125 கிலோ மீட்டர் தூரம் உள்ள “திருச்சி- மதுரை” தேசிய நெடுஞ்சாலை பணி ஒரு கிலோ மீட்டருக்கு 3.36 கோடி ரூபாய் என்ற அளவிலும், கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியிலிருந்து பூந்தமல்லி வரையுள்ள 300 கிலோ மீட்டர் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ஒரு கிலோ மீட்டருக்கு 3.35 கோடி ரூபாய் மதிப்பிலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியதை வசதியாக மறைத்து, தனது ஊழல் துர்நாற்றத்திற்கு சாம்பிராணி போட்டு மறைக்க முயற்சி செய்திருக்கிறார்.

“வடக்கு- தெற்கு காரிடார் தேசிய நெடுஞ்சாலை (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி) பகுதிகள் சாலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட “சேலம்- செங்கம்பள்ளி” சாலைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5.65 கோடி ரூபாய் மட்டுமே ஆணையம் வழங்கியிருக்கிறது. ஆனால் கிலோ மீட்டருக்கு 12 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் அண்டப்புளுகு ஆகாசப் புளுகு வெட்கம் நாணம் ஏதுமின்றி அவித்துவிட்டுள்ளார். “ஆன்லைன் டெண்டர்” பற்றி முதல்வர் பேசியிருக்கிறார். ஆன் லைன் டெண்டர் யாரால் போட முடிகிறது? எப்படியெல்லாம் நிபந்தனைகள் வைத்து போட்டியாளர்கள் நீக்கப்படுகிறார்கள்? அமைச்சர்களின் கம்பெனிகளுக்கு மட்டும் எப்படி டெண்டர்கள் வழங்கப்படுகின்றன? என்பது எல்லாம் ஏற்கனவே எங்கள் தலைவரின் கைக்கு துறை வாரியாக வந்து சேர்ந்து விட்டது.  தன் ஊழலுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல்- ஏழு வருடம் கழித்து தி.மு.க. ஆட்சியில் டெண்டர் ஊழல் என்கிறார் முதல்வர். தைரியமிருந்தால் வழக்குப் போடுங்கள். அதை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

“ராமலிங்கம் அன்ட் கோ” தி.மு.க. ஆட்சியில் இருந்தவர்கள் யாருக்கும் சம்பந்தியில்லை. அவர்கள் திமுக ஆட்சியில் டெண்டர் எடுத்திருந்தால் தவறு இல்லை. ஆனால் முதல்வர் தனது சம்பந்திக்கு உள்நோக்கத்தோடு டெண்டர் கொடுத்தார் என்பது தான் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்ல முதல்வருக்கு அறவே வக்கில்லை. ஊழல் முதல்வருக்கு எங்கள் திமுக தலைவரின் தகுதி பற்றிப் பேச துளி கூட அருகதை இல்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய இலக்கணத்தோடு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு பெற்றவர் எங்கள் தலைவர். எங்கள் தலைவர் அரசியலில் நேர்மையை சம்பாதித்தார்.

நீங்கள் சி.பி.ஐ. விசாரணையை மூட்டை மூட்டையாகச் சம்பாதித்து வைத்துள்ளீர்கள். டெண்டர் ஊழல்களின் வண்டவாளம் எல்லாம் சி.பி.ஐ. விசாரணையில் தண்டவாளத்தில் ஏறும்போதும், 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பில் இந்த ஆட்சி ஆட்டம் கண்ட பிறகும் எங்கள் தலைவரின் தகுதி எடப்பாடி பழனிச்சாமியின் கண்களுக்கு-மட்டுமல்ல அதிமுக அமைச்சரவையில் உள்ள ஊழல் அமைச்சர்கள் எல்லோரின் கண்களுக்கும் நன்றாகவே தெரியும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஊழல் மகா சமுத்திரத்தில் மூழ்கி, வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறித் தத்தளித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எங்கள் தலைவர் பற்றிப் பேசுவதற்கு முன்பு நாவடக்கம் தேவை என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: