×

கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீது பாலியல் வழக்கு: நடிகை சரிதா நாயர் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சரிதா நாயர் அளித்த புகாரின் பேரில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, கே.சி.வேணுகோபால் எம்பி மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், சரிதா நாயர் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது. கேரளாைவை சேர்ந்தவர் நடிகை சரிதா நாயர். கேரளா, தமிழகத்தில் சோலார் பேனல், காற்றாலைகள் அமைத்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக அவர் மீது புகார்கள் குவிந்தன. இரு மாநிலங்களிலும் அவர் மீது 10க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து, கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வேணுகோபால் எம்பி, அடூர் பிரகாஷ், அனில் குமார், ஆரியாடன் முகமது, முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் மீது சரிதா நாயர் பலாத்கார புகார்களை கூறினார்.

இது, கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரிக்க, கேரளாவின் முந்தைய காங்கிரஸ் அரசு ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை கடந்தாண்டு கேரள அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால், இந்த அறிக்கையின்படி, யார் மீதும் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று கேரள அரசுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. இதனால், உம்மன்சாண்டி உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் உம்மன்சாண்டி, கே.சி.வேணுகோபால் எம்பி, அடூர் பிரகாஷ், அனில் குமார், ஆரியாடன் முகமது, அப்துல்லா குட்டி ஆகியோர் தன்னை பலாத்காரம் செய்ததாக முதல்வர் பினராய் விஜயனிடம் சரிதா நாயர் சமீபத்தில் திடீரென புகார் அளித்தார். ஆனால், ‘ஒரே புகாரின் பேரில் பலர் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது. தனித்தனியாக புகார் அளித்தால் வழக்குப் பதிவு செய்யலாம்’ என்று அப்போதைய குற்றப்பிரிவு டிஜிபி ராஜேஷ் திவான் கூறினார்.

இதையடுத்து, உம்மன் சாண்டி, கே.சி. வேணுகோபால் எம்பி மீது சரிதா நாயர் தனித்தனியாக புகார் அளித்தார். இதையடுத்து, இருவர் மீதும் கேரள குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக டிஜிபி லோக்நாத் பெக்ரா அளித்த பேட்டியில், ‘‘உம்மன்சாண்டி மீது இயற்கைக்கு மாறான பலாத்கார வழக்கும், வேணுகோபால் மீது சாதாரண பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இவர்கள் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களை தொடர்ந்து, மேலும் பல காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சரிதா நாயர் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.

சட்டப்படி எதிர்கொள்வேன்
உம்மன்சாண்டி கூறுகையில், ‘‘சபரிமலை விவகாரத்தை திசை திருப்பவே என் மீது  பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, அரசியல் லாபத்துக்காக செய்யப்பட்டுள்ளது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன். அடுத்த  கட்ட நடவடிக்கை குறித்து நாளை திருவனந்தபுரத்தில் விரிவாக கூறுவேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saritha Nair ,Oommen Chandy , Vimanasandi, sex actress and actress Sarita Nair
× RELATED உம்மன் சாண்டிக்கு எதிரான சரிதா...