சென்னை: சென்னையில் இருந்து சார்ஜா செல்லும் ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சர்வதேச முனையத்தில் இருந்து புறப்பட தயாரனது. அதில் பயணம் செய்ய வந்த கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த நூர்முகமது (30) என்பவரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அது போலி பாஸ்போர்ட் என தெரிந்தது. விசாரணையில் அவரது உண்மையான பெயர் தங்கவேல் (30), அவருக்கு சார்ஜாவில் வேலை கிடைத்துள்ளது. ஆனால், அங்கு செல்வதற்கு பாஸ்போர்ட் இல்லாததால், ஒரு ஏஜென்ட் மூலம் ரூ1 லட்சம் செலுத்தி போலி பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதையடுத்து அதிகாரிகள், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அவரை ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், அவருக்கு போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்த ஏஜென்ட்டை வலைவீசி தேடி வருகின்றனர்.