சென்னை: சென்னை ராயபுரம் செட்டி தோட்டம் குடிசை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (25). கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (23). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வினோத் (25). இவரது மனைவி பரமேஸ்வரி (23). பிரேம்குமாருக்கும், வினோத்துக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதுதொடர்பாக ராயபுரம் போலீசில் பிரேம்குமார் புகார் செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்ததும் பிரேம்குமாருக்கும், வினோத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரேம்குமாருக்கு ஆதரவாக உறவினர்களான பிராட்வேயை சேர்ந்த மேரி (40), மெர்லின் (33), சங்கர் (30) ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த வினோத், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மேரியின் மார்பில் குத்தியுள்ளார். தடுக்க வந்த மெர்லினின் கையில் கத்திக்குத்து விழுந்தது. தகவல் அறிந்ததும் ராயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேரி பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், அவரது தம்பி தமிழ்செல்வன் (24), உறவினர் சங்கர் (27), வினோத்தின் மனைவி ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி