வாஷிங்டன்: ‘‘சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவீர்கள்’’ என ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசை சேர்ந்த 1,600 பேர் கவுதமாலா வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய எல்லையில் காத்திருக்கின்றனர். இது பற்றிய தகவல் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கிடைத்தது. இதையடுத்து ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைபவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார்கள்’ என்று கூறியுள்ளார்.