முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் வழக்கு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு மாற்றம்

புதுடெல்லி: முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் பொதுச்செயலாளர் தாமோதர கிருஷ்ணன் தொடர்பான வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு மாற்றி அமைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.‘அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க கூவத்தூரில் வைத்து நடத்திய குதிரை பேர ஊழலை மக்களுக்கு தெரியும் அளவிற்கு வெளியே கொண்டு வருவேன்’ என முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் துணை ஆணையர் அரவிந்தன் வழக்கு பதிவு செய்தார்.

இதுகுறித்து வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணன் சார்பாக அவரது மனைவி லாவண்யா தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். அதில்,”கூவத்தூர் விவகாரத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் பட்டியலிட்டு வெளியே கொண்டு வருவேன் என தெரிவித்த எனது கணவர் மீது துணை ஆணையர் அரவிந்தன் பொய் வழக்கு பதிவு செய்து எங்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். இதனால் அவர்மீது ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு குறித்து விரைந்து விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றமும் மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடந்த மாதம் 26ம் தேதி பரிந்துரை செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில்,”இந்த வழக்கை விசாரிக்க சரியான முகாந்திரம் உள்ளது. இந்த வழக்கு மாநில பட்டியல் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: