அரசு ஊழியர், வியாபாரி வீட்டில் 28 சவரன், 1 லட்சம் கொள்ளை: மேற்கூரையை உடைத்து மர்ம ஆசாமிகள் கைவரிசை

சென்னை: அரசு ஊழியர், வியாபாரி வீட்டில் 13 சவரன், ₹1 லட்சம் ரொக்கம், எல்இடி ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். சென்னை பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டை, ஆர்.ஜி. நகர், அண்ணா சாலையை சேர்ந்தவர் அரவிந்தன் (52). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தில் உதவி பொறியாளராக உள்ளார்.  இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் சிதம்பரம் கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை பார்த்து அரவிந்தன் அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 13 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

* மயிலாப்பூர் சாரதாபுரத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (58). தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஓட்டு வீட்டில் வசிப்பதால் வழக்கமாக இரவு நேரத்தில் பக்கத்து தெருவில் வசித்து வரும் தனது மகள் வெண்ணிலா வீட்டில் தான் மனைவியுடன் தூங்குவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பரமேஸ்வரன் தனது மனைவியுடன் மகள் வீட்டிற்கு சென்று விட்டார். பிறகு நேற்று காலை வீட்டின் கதவை திறந்து பார்த்த போது எல்இடி டிவி மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பீரோவை பார்த்த போது தொழில் வளர்ச்சிக்காக வைத்திருந்த ₹1.38 லட்சம் பணம், ஒரு சவரன் மோதிரம் மாயமாகி இருந்தது. பூட்டிய வீட்டில் எப்படி பொருட்கள் மாயமானது என்று குழப்பத்துடன் பரமேஸ்வரன் மேலே பார்த்த போது வீட்டின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு வியப்படைந்தார்.

* வளசரவாக்கம், பாத்திமா நகர், மருதம் தெருவை சேர்ந்தவர் சேஷன் (71), அரசு வங்கியில் மேலாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி, தாமிரபரணியில் நடக்கும் மகாபுஷ்கர விழாவிற்கு வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் சென்று விட்டார். இவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் உத்ரா என்பவர் நேற்று காலை கீழே பார்த்தபோது சேஷன் வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. விசாரணையில், பீரோவில் இருந்த 15 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

*ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் கருணாநிதி (45). சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு, அங்குள்ள டிக்கெட் கவுன்டருக்கு சென்று, டிக்கெட் முன்பதிவு செய்தார். பின்னர், அங்கிருந்து பைக்கை எடுக்க வந்தபோது, பைக் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

* அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு பிள்ளையார் கோயில் முதல் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (28). எலக்ட்ரீஷியன். இவரது மனைவி திவ்யா (22). இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று காலை திவ்யா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

* அம்பத்தூர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் மனோஜ்குமார் (21) என்பவரை வெட்டிய அம்பத்தூர் பால் பண்ணை ஊழியர் விக்னேஷ் (20) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

* குன்றத்தூர் அடுத்த கலெட்டிப்பேட்டை, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (20). இவர், சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சமீப காலமாக பிரவீன்குமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

* வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகர், 4வது  தெருவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினயர் பிரபு ராம் (25) என்பவரிடம் செல்போன் பறித்த பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த ரீகன் (19), ரமேஷ் (21) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

* நுங்கம்பாக்கத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மின்சார ரயில் மோதி அண்ணாநகர் முகப்பேர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (28) என்பவர் உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: