திருப்பூர்: பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் ஒருபகுதியான ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்பூரில் நேற்று பேரணி நடத்தினர்.தமிழக அரசு கேரளாவிற்கு வழங்கும் தண்ணீரை நிறுத்தி பிஏபி பாசன விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், இடைமலையாறு- நல்லாறு அணைத்திட்டத்தை நிறைவேற்றினால் பிஏபி பாசன பகுதியான 4.25 லட்சம் ஏக்கர் விவசாய விளைநிலங்களுக்கு முழு அளவில் நீரை கொடுக்கலாம் என்றும் கோரி பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன விவசாயிகள் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில், நேற்று திருப்பூரில் கவன ஈர்ப்பு பேரணி நடந்தது.
திருப்பூர்-பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் இருந்து துவங்கிய பேரணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறியதாவது. பிஏபி பாசன பகுதி விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையாக ஆனைமலையாறு- நல்லாறு அணைத்திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். முதல் கட்டமாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனிடமும் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி