சேலத்தில் பரபரப்பு சம்பவம்: பெண் மீது ஆசிட் வீச்சு கள்ளக்காதலன் வெறிச்செயல்

சேலம்: சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்டது. சேலம் மாவட்டம் எஸ்.பாப்பாரப்பட்டியை சேர்ந்த டிரைவர் பாலமுருகன். இவரும், சேலம் குகை பகுதியை சேர்ந்த காயத்ரி (31) என்பவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே காயத்ரிக்கும், குகை பகுதியை சேர்ந்த மரஅறுவை ஆலை வைத்துள்ள சீனிவாசன் (40) என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சீனிவாசனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.

கள்ளத்தொடர்பு குறித்து பாலமுருகன் மனைவியையும், சீனிவாசனையும் எச்சரித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கடந்த 5 மாதத்திற்கு முன்பு, காய்த்ரி தனது தாய் வீட்டிற்கு, குழந்தைகளுடன் வந்து தங்கினார். மேலும் கள்ளக்காதலன் சீனிவாசனிடம் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் சீனிவாசன், காயத்ரியை விடாமல் பின்தொடர்ந்து வந்து பேசுமாறு தொந்தரவு செய்துள்ளார். இதற்கு காயத்ரி மறுத்துள்ளார். இது சீனிவாசனுக்கு அவர் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று காலை குகை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் குழந்தைகளை விடுவதற்காக, காயத்ரி நடந்து சென்று கொண்டிருந்தார்.

மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, டூவீலரில் வந்த சீனிவாசன், திடீரென ஆசிட்டை எடுத்து காயத்ரி மீது வீசிவிட்டு தப்பிச்சென்றார். இதில் காயத்ரியின் முகத்தில் வலது பக்கம் வெந்தது. மேலும் அவரது வலது தோள்பட்டை, மார்பு, கால் ஆகிய பகுதியிலும் படுகாயம் ஏற்பட்டது. வலியால் அலறித் துடித்த காயத்ரியை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயின் நிலை கண்டு அவரது குழந்தைகளும் அலறி துடித்தனர். சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை போலீசார், வழக்கு பதிந்து தப்பியோடிய சீனிவாசனை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: