டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த உலக மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் 4ஆம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது. இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு நிதி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி மற்றும் தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார், சவுதி அரேபியாவின் எண்ணெய் இலாகா அமைச்சர், ஆஸ்திரேலிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலையைக் கட்டுப்படுத்துவது, இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, எண்ணெய் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீடுகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவது, ஆழ்கடலில் எண்ணெய் வள ஆய்வு, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகியவை பற்றி இந்தக் கூட்டத்தில் பிரதமர் விரிவான ஆலோசனை நடத்துகிறார். கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் நடத்தும் 3ஆவது ஆலோசனை கூட்டம் இதுவாகும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி