சென்னை: “நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பி.ஏ.பி விவசாயிகள் எழுச்சிப் பேரணிக்கு திமுக ஆதரவு அளிக்கும்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் (பி.ஏ.பி) கீழ் தமிழக விவசாயிகளின் கனவுத் திட்டமான “ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை” நிறைவேற்றவும், “அக்டோபர் 1ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை நீராறில் இருந்து கேரளாவிற்கு திறந்து விடப்பட்டும் தண்ணீரை நிறுத்தக் கோரியும்” பி.ஏ.பி. பாசன விவசாயிகளின் சார்பில் திருப்பூரில் 15ம் தேதி(இன்று) நடைபெறவிருக்கும் “மாபெரும் கவன ஈர்ப்பு எழுச்சிப் பேரணிக்கு” திமுக சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்தப் பேரணியில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.திமுக ஆட்சியில் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த போது, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த 1958ம் வருடத்தில் இருந்து செயல்படுத்தும் வகையில், 1970 ஆண்டில் போடப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பின் தேதியிட்ட ஒப்பந்தம் பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. பல நதிகளை இணைக்கும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிறைவேற்றப்பட வேண்டிய ஆனைமலையாறு திட்டத்தினால், தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். அது கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வுரிமைக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.