வாஷிங்டன்: உள்நாட்டு தகவல் கொள்கையில் மென்மையான நிலைப்பாட்டை பின்பற்றும்படி பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் இரண்டு முக்கிய செனட் உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் வெளியி–்–்ட்ட சுற்றறிக்கையில், ‘நிதிச்சேவை அளிக்கும் நிறுவனங்கள், பண பரிவர்த்தனை தொடர்பான அனைத்து தகவல்களையும், உள்நாட்டுக்குள் மட்டும் கிடைக்கும் வகையில் சேமித்து வைக்க வேண்டும்.
இதற்கு அக்டோபர் 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் அமெரிக்க ஐ.டி நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேபோல், ‘‘பண பரிவர்த்தனை தகவல்கள் உலகம் முழுவதும் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும், தகவல்களை ஒரு நாட்டுக்குள் மட்டும் முடக்குவதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என உலக வர்த்தக சங்கத்தின் அமெரிக்க தூதர் டென்னிஸ் ஷியா கூறியுள்ளார்.