வாஷிங்டன்: ‘‘இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களைப் போன்ற தகுதியானவர்களே அமெரிக்காவுக்கு வருவதை விரும்புகிறோம்’’ என அதிபர் டெனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை தடுக்க அதிபர் டிரம்ப் பல்வேறு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு டிரம்ப் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
எல்லை விஷயத்தில் நான் மிக கடுமையாக இருக்கிறேன். சட்டத்திற்கு உட்பட்டே எங்கள் நாட்டிற்கு எவரும் வர வேண்டும். சட்ட விரோதமாக அல்ல. அதோடு தகுதியானவர்களே இங்கு வர வேண்டுமென விரும்புகிறேன். இங்கு வருபவர்கள் அமெரிக்க மக்களின் நலனுக்கு பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களைப் போன்ற தகுதியானவர்களே அமெரிக்காவுக்கு வரவேண்டும் என்பதை இங்குள்ள மக்களும் விரும்புகிறார்கள்.