ஐதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில் அஜிங்க்யா ரகானே - ரிஷப் பன்ட் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன் எடுத்திருந்தது. பாவெல் 22, ஷாய் ஹோப் 36, டோவ்ரிச் 30, கேப்டன் ஹோல்டர் 52 ரன் எடுத்தனர். ரோஸ்டன் சேஸ் 98 ரன், பிஷூ 2 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பிஷூ மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, சதத்தை நிறைவு செய்த சேஸ் 106 ரன் (189 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி உமேஷ் வேகத்தில் கிளீன் போல்டானார்.அடுத்து வந்த கேப்ரியல் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (101.4 ஓவர்). வாரிகன் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீசின் கடைசி 3 விக்கெட்டையும் சாய்த்த உமேஷ், டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து அசத்தினார். அவர் 26.4 ஓவரில் 3 மெய்டன் உட்பட 88 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். குல்தீப் 3, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ராகுல், பிரித்வி ஷா களமிறங்கினர். ஒரு முனையில் ராகுல் நிதானமாக விளையாட, அதிரடியில் இறங்கிய ஷா வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம் பார்த்தார். அவர் 30 பந்தில் 42 ரன் எடுத்திருக்க, மறுமுனையில் 25 பந்துகளை சந்தித்த ராகுல் 4 ரன் மட்டுமே எடுத்து ஹோல்டர் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து பிரித்வியுடன் புஜாரா இணைந்தார்.