ஆபீஸ் பாய் வேலை பார்க்கவா காக்கி சட்டை

குமரி மாவட்ட ஆயுதப்படையில் ஆண்கள், பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளனர். மற்ற மாவட்டங்களில் 2016ல் பணிக்கு சேர்ந்தவர்களே, சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட பின்னர், குமரி மாவட்டத்தில் 2006, 2007ல் பணிக்கு சேர்ந்தவர்கள் கூட இன்னும் ஆயுதப்படையில் தான் உள்ளனர். இவர்களில் பெண் போலீசாரும் உண்டு. ஆயுதப்படையில் உள்ள போலீசார் மற்றும் பெண் போலீசாரை எஸ்.பி. அலுவலக அமைச்சு பணிகள் மற்றும் காவல் நிலையங்களில் எடுபிடி வேலைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். மாவட்ட எஸ்.பி.யாக துரை இருந்த சமயத்தில் இதை கண்டுபிடித்து கடுமையாக எச்சரித்தார். ஆயுதப்படையில் உள்ள போலீசார் ஆயுதப்படை பணியை மட்டுமே பார்க்கவேண்டும். ‘‘ஆபீஸ் பாய் வேலை பார்க்க காக்கி சீருடை போட வில்லை’’ என உத்தரவிட்ட அவர், எஸ்.பி. அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் எடுபிடி வேலை செய்து கொண்டு இருந்த ஆயுதப்படை போலீசார் 90 பேரை, ஆயுதப்படைக்கே மாற்றி உத்தரவிட்டார். இந்த நிலையில் எஸ்.பி. துரை மாற்றப்பட்டு, நாத் பொறுப்பேற்றார். இவர் பெரிதாக எதையும் கண்டு கொள்ளவில்லை என்பதால் மீண்டும் ஆயுதப்படை போலீசாரை குறிப்பாக பெண் போலீசார் அதிகம் பேரை எடுபிடி வேலைக்கு மாற்றி உள்ளனர்.

சுமார் 130 பேர் இதுபோன்று மாற்றப்பட்டு தற்போது காவல்துறை சீருடையுடன் ஆபீஸ் பாய் வேலை பார்க்கிறார்கள். இது மட்டுமின்றி, ஆயுதப்படையில் உள்ள சில அதிகாரிகள், தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு ஆயுதப்படையில் இருந்து அதர் டூட்டி பணி கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். இதனால் ஆயுதப்படையில் இருக்கும் சொற்ப எண்ணிக்கையிலான போலீசார் தான் மாறி, மாறி பாதுகாப்பு பணி உள்பட எல்லா பணிக்கும் அனுப்பப்பட்டு வருகிறார்கள். இவர்களில் பெண் போலீசார் பாடு, கடும் திண்டாட்டமாகி உள்ளது. இயற்கையாக உள்ள பிரச்னை, உடல் உபாதைகள் பற்றி கூறினாலும் வெளி மாவட்ட பாதுகாப்பு பணிக்கு தொடர்ச்சியாக அனுப்பி விடுகிறார்கள். இவ்வாறு உடல் நிலை சரியில்லாமல் வேலைக்கு வந்த பெண் போலீஸ் ஒருவர், எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் மயங்கி விழுந்த பின்னரே எஸ்.பி.க்கு இந்த பிரச்னை தெரிய வந்துள்ளது. இருப்பினும் முழுதாக எதையும் கூறாமல் மூடி மறைத்து விட்டனர். எனவே ஆயுதப்படை போலீசார் கடும் அதிருப்தியில் உள்ளனர். எஸ்.பி. நாத் நேரடியாக அழைத்து விசாரணை நடத்தினால் அனைத்து தகவல்களை அள்ளி விட போலீசார் சிலர் தயாராகி வருகிறார்கள்.

மணல் கொள்ளை பற்றி

தகவல் கொடுத்தால் சிறை

மணல்  கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை  எடுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறது. இந்த   உத்தரவுக்கு பிறகு, புதுவிதமான டெக்னிக்கை திருச்சி போலீஸ்   கையாள்கிறதாம்....அதாவது மணல் கொள்ளை குறித்து புகார் செய்பவர்கள், இனி  அவர்கள் மணல் கொள்ளை நடப்பது பற்றி வாயே திறக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட  புகார்தாரர் மீதே போலீசார் ஏதாவது கேஸ் போட்டு சிறைக்கு அனுப்பி  விடுகிறார்களாம்...

மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுக்க இரவு, பகல்  பாராமல் பணி செய்து போலீசில் ஒப்படைத்தாலும், அந்தந்த போலீஸ் ஸ்டேசன்களில்  உள்ள அதிகாரிகள் பெரிதாக ஆர்வம் காட்டுவ தில்லையாம்.... அப்படி ஆர்வம்  காட்டினால் அவர்களுக்கு வரவேண்டிய மாமூல் வராமல் போய் விடுமாம்...  சமீபத்தில் மணல் கொள்ளை குறித்து தகவல் கொடுத்த திருச்சி குட்டப்பட்டு  கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ், பெலிக்ஸ், செவந்தலிங்கம் ஆகியோர் மீது  போலீசார் வழக்கு பதிந்து அவர்களை சிறைக்கு அனுப்பியுள்ளார்களாம்.. இப்படி  திருச்சியில் பல இடங்களில் மணல் கொள்ளையர்களை பிடித்து கொடுத்தாலும்  அவர்கள் மீது எந்தவித வழக்கு போடுவது கிடையதாம்.... புகார்  தெரிவிப்பவர்கள் மீதுதான் வழக்கு பாய்கிறதாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: