மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டும். அதில் செல்ல இருந்த 119 பயணிகள் அதிகாலை 4 மணிக்கே வந்து விட்டனர். அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏற தயாரானார்கள். ஆனால் விமானம், நிர்வாக காரணத்தால் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. என்ன காரணம் என்று சொல்லாததால் பயணிகள் காத்திருந்து அவதிப்பட்டனர். நீண்ட நேரத்துக்கு பிறகு, காலை 8.40 மணிக்கு பயணிகளுடன் விமானம் புறப்பட்டுச் சென்றது. தாமதம் பற்றி விசாரித்தபோது, விமானி தாமதமாக வந்ததே காரணம் என்று கூறப்பட்டது.