சென்னை: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: கடந்த 11ம் தேதி பாலக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் திடீரென வழக்கத்துக்கு மாறான சத்தம் கேட்டது. ரயில் பெட்டிகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது போன்ற சத்தம் வந்தது. அந்த ரயிலை லோகோ பைலட் சையது ஜோஸ் மற்றும் உதவி லோகோ பைலட் சசிகுமார் ஆகியோர் ஓட்டி சென்றனர். சத்தம் கேட்டதும் இவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக சம்பவம் குறித்து அருகில் உள்ள ரயில்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பவ இடம் சென்று பிரச்னையை சரிசெய்தனர். அதன்பிறகு மறுநாள் அந்த ரயில் வழக்கம்போல் இயக்கப்பட்டது. ஓட்டுனர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே சிறப்பாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர்கள் சையது ஜோஸ் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஸ்தா பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர்களை அழைத்து ₹2000 பரிசு தொகையும் வழங்கி கவுரவித்தார். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.