விழுப்புரம்: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, உதவியாளர் செந்தில்குமார் ஆகியோருக்கு வரும் அக்டோபர் 9ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரியா உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் செம்மண்டலம் தவுலத்நகரை சேர்ந்தவர் பாபு(55). இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கூத்தக்குடியை சேர்ந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் முத்துக்குமாரின் சுற்றுலா வேனுக்கு தகுதிசான்றிதழ் வழங்குவதற்கு ₹25 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் செந்தில்குமாரும் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பாபுவின் வங்கிக்கணக்குகளை முடக்கம் செய்தனர். வீட்டில் சோதனையிட்டபோது ₹30 லட்சம் ரொக்கப்பணம், 200 பவன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிபொருட்கள் சிக்கியது.