தண்டையார்பேட்டை: போதையில் ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட சிறப்பு எஸ்.ஐயை தாக்கிய ஹோம்கார்டை போலீசார் கைது செய்தனர். அவரை தங்களிடம் காட்டக்கோரி அவரது உறவினர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் மறியலில் ஈடுபட்டதால் காசிமேட்டில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூரை சேர்ந்தவர் ராஜசேகர் (55). காசிமேடு காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐயாக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற ராஜசேகர் காசிமேடு, தாண்டவன் தெருவில் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் ஆசாமி ஒருவர் போதையில் ரகளையில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து ராஜசேகர் அந்த ஆசாமியை வீட்டுக்கு செல்லுமாறு கூறி உள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமி, ராஜசேகரை சரமாரியாக தாக்கி சட்டையை கிழித்து உள்ளார். இதில் ராஜசேகர் காயம் அடைந்தார். தகவலறிந்து சக போலீஸ்காரர்கள் விரைந்து காயம் அடைந்த ராஜசேகரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து போதை ஆசாமியை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில், காசிமேடு புதுமனை குப்பத்தை சேர்ந்த தனசேகர் (34) என்பதும் ஏற்கனவே காசிமேடு பகுதியில் ஹோம்கார்டாக வேலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தனசேகரை நேற்று கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.