திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே ேநற்று அதிகாலை பிரபல வயலின் இசை கலைஞர் பாலபாஸ்கர் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அவரது 2 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார். கேரளாவில் புகழ்பெற்ற வயலின் இசைக் கலைஞராக இருப்பவர் பாலபாஸ்கர் (40). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி லட்சுமி, மகள் தேஜஸ்வி பாலா (2) ஆகியோருடன் குருவாயூர் கோயிலுக்கு காரில் சென்றார். காரை அர்ஜூன் என்பவர் ஓட்டினார். இந்த நிலையில் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த பாலபாஸ்கர், அங்கிருந்து நள்ளிரவு திருவனந்தபுரம் புறப்பட்டார்.நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கார் திருவனந்தபுரம் அருகே பள்ளிபுரம் பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில்குழந்தை தேஜஸ்வி பாலா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பாலபாஸ்கர், டிரைவர் அர்ஜூன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லட்சுமி லேசான காயங்களுடன் தப்பினார்.