புதுடெல்லி: கார்த்தி சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு, அக்டோபர் 8ல் விசாரணைக்கு வருகிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஏர்செல் மேக்சிஸ் அந்நிய நேரடி முதலீடு அனுமதி முறைகேடு வழக்கை அமலாக்கத் துறையும், சிபிஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் சிபிஐ கடந்த ஜூலை 19ல் டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இது தொடர்பாக கார்த்தி மீது கடந்த ஜூலை 13ல் அமலாக்கத் துறையும் தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மூத்த வக்கீல் சோனியா மாத்தூரும் ஆஜராகினர். ‘இந்த வழக்கில் வாதிட அவகாசம் தேவைப்படுவதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என இருவரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற நீதிபதி, மனு மீதான விசாரணையை அக்டோபர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை கார்த்தி சிதம்பரம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி