பாட்னா: பித்ரு பக்ஷா எனப்படும் மூதாதையர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களில் குற்றச்செயல் செய்வதில் இருந்து விலகியிருங்கள் என கோரிக்கை விடுத்த பீகார் துணை முதல்வர் சுசில் குமாருக்கு ஆர்ஜேடி கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரில் கடந்த சில நாட்களாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 23ம் தேதி முசாபர்நகர் முன்னாள் மேயர் சமீர் குமார் சிங் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 21ம் தேதி ஒப்பந்ததாரர் தேப்ராஜ் ஆலம் என்பவர் பட்டப்பகலில் பாட்னா அருகே கோட்வாலி காவல் நிலையம் அருகே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், பித்ருபக்ஷா நாட்களில் குற்றச்செயல் செய்யாதீர்கள் என குற்றவாளிகளுக்கு துணை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். பீகாரில், இந்துக்களின் நாட்காட்டியில் பித்ரு பக்ஷா எனப்படும் 16 நாட்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் இறந்த மூதாதையர்களுக்கு திதி கொடுப்பதுடன், அவர்களுக்கு கயாவில் ஓடும் பால்கு ஆற்றில் உணவு படையலிட்டு வழிபடுவது வழக்கம். நிலாவை மையமாக கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி கடந்த 23ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 8ம் தேதி வரை சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.