சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய பாஜ அரசின் நிர்வாக குறைபாடே காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அம்பத்தூரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர் உண்ணாநோன்பு போராட்டம் நடந்தது. அப்போது, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைவதை குறிக்கும் வகையில் பாடை கட்டி அம்பத்தூர், சி.டி.எச் சாலையில் ஊர்வலமாக சென்றனர். இதுதொடர்பான வழக்கு அம்பத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக, நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக ஆர்.நல்லகண்ணு தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். வழக்கு தொடர்பாக அக்டோபர் 3ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
பின்னர், நல்லகண்ணு நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா முதலில் தந்தை பெரியாரை கேவலமான வார்த்தையில் விமர்சனம் செய்தார். பின்னர் அனைத்து கட்சி தலைவர்களையும் சமூகவிரோதியாக சித்தரித்து பேசினார். தொடர்ந்து மாநில காவல்துறை மற்றும் உயர் நீதிமன்றத்தையும் விமர்சனம் செய்கிறார். மக்கள் பிரச்னைக்காக போராடும் தலைவர்கள் திருமுருகன் காந்தி, கவுதமன் போன்றவர்களை உடனடியாக கைது செய்யும் மாநில அரசு எச். ராஜாவுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவது ஏன்?. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இது மத்திய அரசின் நிர்வாக குறைபாடே காரணம். அம்பத்தூர் காவல்துறையினர் கடந்த 2017ல் எங்கள் மீது போடப்பட்ட வழக்கு பொய்யானது என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி