திருமலை: விசாகப்பட்டினத்தில் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாவோயிஸ்ட்டுகள் எம்எல்ஏ சர்வேஸ்வர ராவை சுற்றி வளைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.ஆந்திராவின் அரக்கு தொகுதி எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோர் தும்ரிகூடாவில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு சென்று காரில் திரும்பி வந்தபோது, மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னதாக அவர்கள், சாலையின் இருபுறமும் மனு கொடுப்பதுபோல் நின்றிருந்துள்ளனர். இதனை அறியாத எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ் காரை நிறுத்தி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மாவோயிஸ்ட்டுகள் எம்எல்ஏவின் பாதுகாவலரிடம் இருந்த துப்பாக்கிகளை பறித்து எம்எல்ஏவையும், முன்னாள் எம்எல்ஏவையும் கீழே இறக்கி தனித் தனியாக அழைத்துச் சென்று சுட்டுக் கொலை செய்தனர்.
பொதுமக்கள் போல் காரை சுற்றி நின்ற காட்சிகளும், சுட்டுக்கொன்ற பிறகு வனப்பகுதியை நோக்கி மாவோயிஸ்ட்டுகள் ஓடும் காட்சிகளும் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியை நோக்கி ஓடி செல்லும் ஆண், சீனுபாபு என்ற ராயுடு என்பதும், காமேஸ்வரி என்ற சிந்து என்பதும், இருவரும் மாவோயிஸ்ட்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி