ஐடி ஊழியர் மனைவியை கடத்தியதாக வழக்கு அதிமுக மாஜி அமைச்சர் மகனுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: ஐடி ஊழியர் மனைவியை கடத்தி அடைத்து வைத்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் மகனுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  சென்னை, வேளச்சேரியை சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் விஜய் ராஜேஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது: என் மனைவி யாழினி (30). கடந்த 2011ல் எங்களுக்கு திருமணம் நடந்தது. 4 வயதில் இரட்டை ெபண் குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகு என் மனைவி படிக்க விரும்பினார். அவரது விருப்பப்படி சென்னை தரமணியில் உள்ள சட்டப்பள்ளியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.  படிக்க சென்றதும் அவருக்கு நண்பர்கள் அதிகமாயினர். அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. இதனால் எச்சரித்தேன். இதில் கோபித்துக் கொண்ட என் மனைவி வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். பிறகு சமாதானம் ஆகி சொந்த ஊரான தஞ்சைக்கு சென்றோம்.

இதனிடையே அவருடன் படித்த, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயபாலின் மகன் ரத்தீஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தற்போது என் மனைவியை, ரத்தீஷ் தனது நண்பர் துணையுடன் கடத்தி சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். இதுகுறித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். இதையடுத்து முன்னாள் அமைச்சர் மகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், என் மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு என் மனைவியை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சை அனைத்து மகளிர் போலீசார், மனுதாரர் மனைவி யாழினி மற்றும் 2 குழந்தைகளை ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதிகள் தங்கள் அறையில் வைத்து, மனுதாரர் மற்றும் அவரது மனைவியிடம் தனித்தனியாக விசாரித்தனர். பின்னர் மனு குறித்து முன்னாள் அமைச்சரின் மகன் ரத்தீஷூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 9க்கு தள்ளி வைத்தனர். முன்னதாக தஞ்சை ஜேஎம் 1 கோர்ட்டில் நீதிபதி விஜய் அழகிரி முன், யாழினி நேற்று முன்தினம் ஆஜரானார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: