மாநகர போக்குவரத்து கழகம் பஸ் பாஸ் கட்டணத்தை 1,300 ஆக உயர்த்துவதை கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மாநகர போக்குவரத்து கழகம் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை 1,000ல் இருந்து 1300 ஆக அதிகரிக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும், போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்க தெரியாமல் கட்டண உயர்வை மட்டும் மேற்கொள்வது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மாதாந்திர பேருந்து பயண அட்டைக்கான கட்டணத்தை 1000ல் இருந்து 1,300 ரூபாயாக உயர்த்த அ.தி.மு.க அரசு ஆலோசித்து வருவது கண்டனத்திற்குரியது.  பேருந்து வாங்குவதில் ஊழல், உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல், 2543 கோடி ரூபாய்க்கு பணிமனைகள் அடமானம் என்று முழுவதும் ஊதாரித்தனமான நிர்வாகத்தை நடத்தி வரும் அ.தி.மு.க அரசு, கட்டண உயர்வு ஒன்றே தங்களுக்கு தெரிந்த நிர்வாகத் திறமை என்ற ரீதியில் செயல்பட்டு வருவது, அரசுப் போக்குவரத்தை மட்டுமே சார்ந்திருக்கும் நலிந்த பிரிவினரின் வாங்கும் சக்தியைப் பற்றிய உணர்வின்மையைக் காட்டுகிறது.

 2011ல் ஆட்சிக்கு வந்தவுடன் நவம்பர் 17ம் தேதி 50 சதவீத பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதால் 2 கோடி பயணிகள் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி வந்த நிலை, 1 கோடியே 80 லட்சம் பயணிகளாக குறைந்தது. பிறகு 2018 ஜனவரி 19ம் தேதி மேலும் 50 சதவீதம் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதால், அரசுப் பேருந்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சமாக குறைந்து  இப்போதுகூட முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, புதிதாக வாங்கப்பட்ட 448 பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் - “வாரண்டி” காலத்தையும் இழக்கும் அபாயத்தில் பணிமனைகளில் நின்று கொண்டிருக்கின்றன. ஆயிரம் ரூபாய் மாதாந்திரப் பேருந்து பயண அட்டையை 1300க்கு உயர்த்தத் துடிக்கும் அரசு, தலா 30 லட்சம் செலவில் வாங்கப்பட்ட இந்த 448 பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்திருப்பது கேடுகெட்ட நிர்வாகத்திற்கு, கண்ணெதிரே காணக் கிடைத்த உதாரணமாக விளங்குகிறது.

போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், கட்டண உயர்வு மட்டுமே எங்களுக்கு கைவந்த கலை என்று அ.தி.மு.க அரசு செயல்படுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, மாதாந்திர பேருந்து பயண அட்டை கட்டணத்தை, தற்போதுள்ள 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக அதிகரிக்கும் முயற்சியை, அ.தி.மு.க அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: