நாமக்கல்: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் சீரங்கன் கூறியதாவது: டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப,லாரி வாடகை எப்போதும் உயர்வதில்லை. வாடகையை பொருட்கள் உற்பத்தியாளர்கள், லாரியை அமர்த்தும் புரோக்கர்கள் (புக்கிங் ஏஜென்டுகள்) தான் நிர்ணயிக்கின்றனர். அதிக லாரிகள் இருப்பதால், இதை புரோக்கர்கள் பயன்படுத்தி, யார் குறைந்த வாடகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு லோடு கொடுக்கிறார்கள். தற்போது ஒரு லிட்டர் டீசல் ₹78.82 காசாக உள்ளது. ஆனால், இதற்கு ஏற்ப லாரி வாடகை இன்னும் உயரவில்லை.
பரமத்தி வேலூரில் இருந்து 16 டன் தேங்காய் லோடை 1500 கிமீ தொலைவில் உள்ள மத்தியபிரதேச மாநிலம் கன்டுவாக்கு கொண்டு செல்ல லாரி வாடகையாக ₹47 ஆயிரம் பெறப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலில் 4 கிமீ மைலேஜ் கிடைக்கிறது. 1500 கிலோ மீட்டர் செல்ல 375 லிட்டர் டீசல் செலவாகிறது. வாடகையில் டீசலுக்கு மட்டும் ₹30 ஆயிரம் செலவாகிறது. டிரைவர் கூலி, புரோக்கர் கமிஷன் 8 ஆயிரம் ஆகிறது. தவிர டோல்கேட், வழியில் திடீர் இடையூறு செலவு ₹10,000ஐ தொடுகிறது. லாரி வாடகையை 25 சதவீதம் உயர்த்தியுள்ளதாக புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் வாடகை உயர்வு லாரி உரிமையாளர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த முறையாவது கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்றார். நாமக்கல் லாரி புக்கிங் ஏஜென்டுகள் சங்க பொறுப்பாளர் பாலசந்திரன் கூறுகையில், ‘‘ லாரி உரிமையாளர்கள் வாடகையை பேசி ஒப்புக் கொண்டுதான் லாரியை இயக்குகிறார்கள்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி