ஈரோடு: அடுத்த மாதம் 18ம் தேதி ஆயுத பூஜை, 19ம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜைக்கு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பூஜை செய்யும்போது பொரி முதன்மை பொருளாக படைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆயுத பூஜைக்காக பொரி தயாரிக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதி பொரி உற்பத்தியாளர் கோபால் கூறியதாவது: கர்நாடகா மாநிலம் தாவணிக்கரை, மாண்டியா, மைசூர், கொள்ளேகால் போன்ற பகுதியில் இருந்து 64 என்ற பெயர் கொண்ட நெல் ரகத்தை கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி பொரி தயாரிக்கிறோம். 100 பக்கா கொண்ட மூட்டை ₹520 முதல் ₹550 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஈரோட்டிலேயே கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை 10க்கும் மேற்பட்ட பொரி உற்பத்தியாளர்கள் இருந்தனர். பொரி தேவை குறைந்ததன் காரணமாக தொழில் நலிவடைந்து, தற்போது 2 உற்பத்தியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த ஆண்டு கூலி உயர்வு போன்ற காரணங்களால் பொரி மூட்டையும் ₹20 வரை உயர்ந்துள்ளது. ஆயுத பூஜைக்காக பொரி உற்பத்தி பணிகள் இரவு பகலாக நடக்கின்றன என்றார்.